இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் மெரினாவில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி!

சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தினர்.

சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம் தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதன்படி, நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இதன் பின்னர் அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதற்கான நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தோம்.

முறையாக பயிற்சி பெற்றுள்ள காவல்துறை இசைக்கலைஞர்கள், நேர்த்தியான இசையை வழங்கியதை கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.