முதல்வர் ஸ்டாலின் பற்றி நான் அவதூறு பரப்பவில்லை: முன்னாள் டிஜிபி நடராஜ்!

முதல்வர் ஸ்டாலின் பேசியதாக பொய்யான தகவலை வாட்ஸ் அப்பில் பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நட்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறு கருத்தை வெளியிடவில்லை என நட்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“இந்துக்களின் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். இந்துக்களின் வாக்குகள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம், இந்துக்களின் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற வேண்டிய அவசியம் எங்க்ளுக்கு இல்லை” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும், ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபியுமான நட்ராஜ், வாட்ஸ் ஆப் குரூப்பில் அவதூறாக கருத்துகளைப் பரப்பியதாக புகார் எழுந்தது.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தேவையில்லாத பிரசாரங்களை செய்கின்றனர் என்றும் தான் பேசியதாக பொய்யான செய்தியை ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் பரப்பி வருவதாகவும், அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார். முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக ஓய்வு பெற்ற டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவருமான ஆர்.நடராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில் ஆர்.நடராஜ் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பவில்லை என்று நடராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கண்டு நான் அதிா்ச்சியடைந்துள்ளேன். பேஸ்ஃபுக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் நான் தீவிரமாக இயங்கவில்லை. மேலும், எந்த அதிகாரப்பூா்வ வாட்ஸ்அப் குழுவையும் நிா்வகிக்கவில்லை. நான் கடந்த இரு ஆண்டுகளாக பொது வாழ்வில் இருந்து விலகி, ஏழை மக்களுக்கு சேவை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மேலும், குடிமைப் பணி தோ்வு எழுதும் இளைஞா்களுக்கு வழிகாட்டி வருகிறேன். எனது உடல்நிலையைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. வாட்ஸ் அப்பிலும் தீவிரமாக இயங்கவில்லை.

ஆட்சியில் உள்ள பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், நான் ஒருபோதும் போலியான செய்திகளைப் பரப்பவில்லை. எந்தத் தவறும் செய்யவில்லை. என் மீதான குற்றசாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். பொது மன்றத்தில், நான் எதையும் வெளியிடவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து நான் அவதூறு கூறியதாக வெளியிடப்பட்ட கருத்துக்கும், எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. என் பெயர் எப்படி அதில் இழுக்கப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அரசியலுக்கு அப்பால் தமிழக முதலமைச்சர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவருக்கு தவறாக தகவல் தெரிவிக்கப்பட்டது துரதிா்ஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.