மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் இருந்து 790 கிலோமீட்டர் கிழக்கு தெற்கு திசையில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டிசம்பர் 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று 4-ஆம் தேதி மாலை கரையை கடக்க உள்ளது. அதன்படி, தெற்கு ஆந்திரா வட தமிழகத்தில் சென்னைக்கும், மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் மற்றும் மழையையொட்டி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்களும் இதில் கலந்துகொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின்போது, உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புயலால் ஏற்படும் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பல்துறை மண்டல குழுக்களை அமைக்க வேண்டும். மழை, வெள்ள காலங்களில் மின்கசிவு ஏற்படுவதை தடுக்க மின்வாரியம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவரச சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை காலங்களில் போக்குவரத்தை சரிசெய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.