ஒவ்வொருவரும் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்: அதிபர் புதின்

ரஷ்யாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் பெண்கள் ஒவ்வொருவரும் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக ரஷ்ய மக்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ரஷ்யாவின் பிறப்பு விகிதம் கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து வெகுவாக குறைந்து வருகிறது. முன்பு ஒவ்வொரு குடும்பத்திலும் 4-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். ஆனால் தற்போதைய நவீன உலகில் அந்த அளவு சுருங்கியது. மேலும் உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 21 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக நாட்டின் மக்கள் தொகையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு ஆகும். எனவே இனிவரும் காலங்களில் ரஷ்யாவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்மூலம் நாட்டின் 1,000 ஆண்டு கால பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும் எனவும் அவர் கூறினார். உக்ரைனுடனான போரில் இதுவரை சுமார் 3 லட்சம் ரஷ்யர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில்தான் புதின் இவ்வாறு முடிவு எடுத்திருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான கணக்கெடுப்பின்படி ரஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடியாக இருந்தது. அது 1999இல் புதின் முதல்முறையாக அதிபர் பதவியை ஏற்கும் முன்பு இருந்த மக்கள்தொகையை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.