மிக்ஜாங் புயலை எதிர்கொள்ள மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது: தங்கம் தென்னரசு

மிக்ஜாங் புயலை எதிர்கொள்ளும் வகையில் மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது வடமேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது சென்னையிலிருந்து 510 கி.மீ தொலைவில் இருந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனச் சொல்லப்பட்டுள்ளது. உருவாகும் இந்த புயலுக்கு மிக்ஜாங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிக்ஜாங்புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் – மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மிக்ஜாங் புயல் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், புயலை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புயல் நேரத்தில் மின்கசிவு காரணமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

மின்னகத்திற்கு வரும் அனைத்து அழைப்புகளுக்கும் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 3,00,000 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ள இடங்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு மையங்களில் மின்சாரத்துறை ஊழியர்கள் களப்பணியாற்ற உள்ளனர்.

மழை நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 15,300 மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 94 இடங்களில் மின் வாரிய வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது கடலோர மாவட்ட மக்களுக்கு மின் விநியோகம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.