மிக்ஜம் புயலில் உயிர் இழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்!

மிக்ஜம் புயல் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘மிக்ஜம்’ புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

இந்த நிலையில், மழை காரணமாக உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், மிக்ஜம் புயல் தாக்கத்தால் அன்புக்குரிய உறவுகளை இழந்துள்ள குடும்பங்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயப்பூர்வ அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன, என்று கூறியுள்ளார்.