ஐ.நா பொது செயலர் அன்டோனியா குட்டரெஸ் பதவிக்காலம் உலக அமைதிக்கு ஆபத்தானது: இஸ்ரேல்!

ஐ.நா பொது செயலர் அன்டோனியா குட்டரெஸ் பதவிக்காலம் உலக அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக குட்டரெஸ் ஐநாவின் பாதுகாப்பு அவை உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தனது பிரிவு 99-ஐ பயன்படுத்தி உறுப்பு நாடுகளை எச்சரித்திருந்தார். பிரிவு-99 என்பது ஐநாவின் பொது செயலர், உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் என அவர் கருதுகிற விவகாரத்தைக் குறிப்பிட பயன்படுத்தும் சாசன உரிமையாகும். அக்கடிதத்தில் “சர்வதேச அமைப்பு, மொத்த ஆற்றலையும் உபயோகித்து போரைத் தடுக்க வேண்டியதும் இந்த நெருக்கடி நிலைக்கு முடிவுகட்ட வேண்டியதும் அதன் பொறுப்பாகும்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குட்டரெஸின் இந்த நடவடிக்கை ஹமாஸை ஆதரிப்பதற்கும் அவர்களின் கொடூரமான தாக்குதலை (அக்.7) அங்கீகரிப்பதற்கும் சமம் என இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார். மேலும், பிரிவு 99-ஐ அவர் செயல்படச் செய்தது மற்றும் போர் நிறுத்தத்துக்கான அழைப்பு ஆகியவை ஹமாஸ பயங்கரவாத அமைப்ப்பிற்கான ஆதரவைக் காட்டுகிறது. முதியவர்களை கொலை செய்தது, குழந்தைகளைக் கடத்தி சென்றது மற்றும் பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்தது ஆகியவற்றுக்கும் சேர்த்தே அவர் ஆதரவு அளிக்கிறார். அவரது பதவிக்காலம் உலக அமைதிக்கு ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.

2017-ல் பொது செயலராகப் பதவியேற்றதுமுதல் முதன்முறையாக குட்டரெஸ் பிரிவு 99-ஐ பயன்படுத்தியுள்ளார். மிக நெருக்கடியான காலத்தில் மட்டுமே இந்த பிரிவு பயன்படுத்தப்படும். இதற்கு முன்பு 1971 இந்தியா- பாகிஸ்தான் போரின்போது ஐ.நாவின் அப்போதைய பொது செயலர் இந்த உரிமைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.