விஜயகாந்த் மீது அப்படி என்ன வன்மம்: பிரேமலதா வருத்தம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது மருத்துவமனையில் அனுதமிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து இணையத்தில் பலவித தகவல்களைப் பரவிய நிலையில், அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, அவர் நலமுடன் இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், விஜயகாந்த் உடன் இருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். இருந்த போதிலும், சில நாட்களுக்கு ஒரு முறை விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்தச் சூழலில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, விஜயகாந்த் உடல்நிலை குறித்து வேண்டுமென்ற தவறான தகவல்களைப் பரப்புவதாகக் கண்ணீர் மல்கக் கூறினார். மேலும், அவர் கேப்டன் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் என்றும் யாரும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூறியதாவது:-

நீங்கள் யாரும் விஜயகாந்த் உடன் இருப்பதில்லை. நான் மட்டுமே அவருடன் இருந்து வருகிறேன். அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்துத் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனாலும், சிலர் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகிறார்கள். தவறாக ஒரு தகவலைப் பரப்பும் முன்பு யாராக இருந்தாலும் எங்கள் தலைமை கழகத்தைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். அப்படி கேட்டால் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சொல்லப் போகிறோம். அதைவிட்டுவிட்டு பலரும் வதந்தி பரப்பி வருகிறார்கள். நான் மனசு வருத்தப்பட்டுக் கேட்கிறேன். கேப்டன் மீது அப்படி என்ன வன்மம் என்று எனக்கு புரியவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் எனப் பல முறை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.. ஆனாலும் சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நன்றா இருக்கும் மனிதரைப் பற்றி இப்படிதான் பரப்புவீர்களா.. ஒரு மனைவியாக என்னையும்.. தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அது எந்தளவு பாதித்து இருக்கும் என்பதைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தால் இப்படிதான் தகவல்களைப் பரப்புவீர்களா.. தயவு செய்து பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள்.

திருமணமே ஆகாத எங்கள் இரு பிள்ளைகளுக்குத் திருமணம் நடந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள்.. நன்றாக இருக்கும் விஜயகாந்த் குறித்து கேவலமான தகவல்களைப் பரப்புகிறீர்கள். அப்படி என்ன தான் வன்மம் எனப் புரியவில்லை. நாங்கள் விளக்கமாக எதுவும் சொல்லவில்லை என்றால் கூட பரவாயில்லை. நான் தொடர்ந்து வீடியோ மூலம் சொல்லி வருகிறேன். தலைமை கழகத்தில் இருந்தும் அறிவிப்பு வருகிறது. அப்படி இருந்தும் தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இதன் காரணமாகவே நான் விஜயகாந்த் உடன் இருக்கும் படங்களையும் வெளியிட வேண்டி இருந்தது. நான் அந்த படத்தைப் போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஆனால், பலரும் பொய்யான தகவல்களைப் பரப்பியதாலேயே நான் அதைப் பகிர்ந்தேன். தயவு செய்து இனிமேலாவது கேப்டன் விஜயகாந்த் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம். விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். இன்னும் 2, 3 நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.