செனகல் நாட்டின் மருத்துவமனையில் தீ விபத்து: 11 குழந்தைகள் உயிரிழப்பு!

செனகல் நாட்டின் உள்ள பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டின் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது. இங்குள்ள பொது மருத்துவமனை ஒன்றில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது. இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு செனகல் நாட்டின் அதிபர் மேக்கி சால் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.