சிதம்பரம் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது, தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது: உயர்நீதிமன்றம்!

சிதம்பரம் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது, தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்திற்குள் நந்தவனம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை பொது தீட்சிதர்கள் அரசின் அனுமதி பெறாமல் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதையடுத்து அறநிலையத் துறை சார்பிலும் எம்.என். ராதா என்பவர் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மனுதாரர் எம்.என்.ராதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகஜாக், எந்தவொரு கட்டுமானங்களு் மேற்கொள்ள மாட்டோம் என இந்த நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துவிட்டு கட்டுமானப் பணிகளை தொடர்ந்து வருகிறார்கள்.

நேற்று கூட ஜேசிபி இயந்திரம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நின்றது. அதற்கான ஆதாரங்களாக இந்த புகைப்படங்கள் உள்ளன. அதற்கு நீதிபதிகள், திருவண்ணாமலை கோயிலுக்கு வெளியே கட்டுமானங்கள் கட்டப்படுவதாக பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் சிதம்பரத்தில் எந்த அனுதியும் பெறாமல் கோயிலுக்குள்ளேயே கட்டுமானம் நடைபெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தீவிரமானது. பாரம்பரியமான சிதம்பரம் கோயில் மீது கை வைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். சிதம்பரம் நடராஜர் கோயில் பக்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதன் மீது யாருமே உரிமை கோர முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது தீட்சிதர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஹரிசங்கர் கூறுகையில், சிதம்பரம் கோயில் வளாகத்திற்குள் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. 150 ஆண்டு பழமைவாய்ந்த உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதுபோல்தான் இதுவும் என வாதிட்டார். அப்போது அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன் குறுக்கிட்டார். அவர் கூறுகையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கிலும் சிதம்பரம் கோயிலில் முறையற்ற நிர்வாக நடைபெற்றால் அதில் தமிழக அரசு தலையிடலாம் என்றுதான் உள்ளது. கோயில் மீதான உரிமைகள் அனைத்தையும் தனிநபர்களுக்கு கொடுத்துவிடவில்லை. சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த கோயிலை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அந்த குழு எப்போது வேண்டுமானாலும் சிதம்பரம் கோயிலுக்குள் சென்று ஆய்வு நடத்தும் என்றார்.

ஆலய வழிபாட்டுக்குழுத் தலைவர் மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ், 1951-ல் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி இந்த கோயிலில் உண்டியல் கிடையாது. பக்தர்கள் அளிக்கும் நன்கொடை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தனிப்பட்ட முறையில் தரப்படும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் சி.கனகராஜ், இந்த கோயிலுக்குள் அனுமதியின்றி யாகங்கள் நடத்தப்படுகிறது. அதற்கு பக்தர்களிடம் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை பணம் வசூலிக்கப்படுகிறது என்றார். அதற்கு நீதிபதிகள், பொத்தாம் பொதுவாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது. அப்படி பணம் வசூலித்தால் அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் என கூறி வழக்கை டிசம்பர் 20-க்கு தள்ளிவைத்தனர்.