சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்எல்ஏக்கு 25 ஆண்டுகள் சிறை!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோந்த் குற்றவாளி என தீர்ப்பளித்து 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் இயற்கை உபாதைக்காக சென்ற 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக, பாஜக எம்எல்ஏ ராம்துலாா் மீது சிறுமியின் சகோதரா் காவல்துறையில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (பாலியல் வன்கொடுமை), 506 (மிரட்டுதல்) பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்சோ) ராம்துலாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு பாஜக சார்பில் சோன்பத்ரா மாவட்டத்தில் துத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே, ராம்துலாா் எம்எல்ஏவாக தேர்வானதைத் தொடா்ந்து, இவ்வழக்கு சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ராம்துலாரை குற்றவாளியாக அறிவித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்டுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நேரடியாக அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்றதால், மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி ராம்துலார் தனது எம்எல்ஏ பதவியை இழக்கிறார். வன்கொடுமை வழக்கில் பாஜக எம்எல்ஏ-க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.