இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு!

இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்-குக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சம்பிரதாய ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இன்று வருகை தந்த ஒமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் வரவேற்றனர். இதன் தொடர்ச்சியாக, ஹைதம் பின் தாரிக்-க்கு முப்படைகளின் ஒருங்கிணைந்த ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து சுல்தான் ஹைதம் பின் தாரிக் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக, ஓமன் சுல்தானின் வருகை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ஓமன் சுல்தானின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால நட்பு, ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். மேலும், பிராந்தியத்தின் நிலைத்தன்மை, முன்னேற்றம், வளம் ஆகியவற்றை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பாகவும் இந்த பயணம் அமையும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.