மிக்ஜம் புயல் பாதிப்பு: இயக்குநர் அமீர் ரூ. 10 லட்சம் நிதியுதவி!

மிக்ஜம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் இயக்குநரும் நடிகருமான அமீர் வழங்கினார்.

மிக்ஜம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். அதன்படி பல்வேறு கட்சிகளின் சார்பிலும் மேலும் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நிதி வழங்கி வருகின்றனர். மேலும் தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் பலரும் புயல் மீட்புப் பணிகளுக்காக நிதி அளித்து வருகின்றனர்.

அந்தவகையில், மிக்ஜம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் இயக்குநரும் நடிகருமான அமீர் இன்று வழங்கினார்.

அதேபோல் மிக்ஜம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள 30 திமுக மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். திமுக மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்கள் ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை வழங்கினார்கள்.