புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி மகனுக்கு மாநில இளைஞரணித் தலைவர் பதவி!

புதிய தமிழகம் கட்சியின் 27ஆம் ஆண்டு தொடக்க விழாவில், கிருஷ்ணசாமி மகனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பரந்து விரிந்து வாழும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சியை கிருஷ்ணசாமி கடந்த 1997ஆம் ஆண்டு தொடங்கினார். தற்போது பட்டியலின வெளியேற்றத்தை முக்கிய கோரிக்கையாக புதிய தமிழகம் வலியுறுத்தி வருகிறது. அத்துடன், பாஜக மற்றும் அதிமுகவுடன் தோழமையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் 27ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் கிருஷ்ணசாமி, தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் புதல்வர் ஷியாம் கிருஷ்ணசாமி கல்லூரி மாணவர் பருவத்திலிருந்தே கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார். குறிப்பாக, முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அவருடைய பங்கு மிகவும் போற்றப்படக்கூடியது. எனவே கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கும், கொள்கைக் கோட்பாடுகளை பரந்துபட்ட மக்களிடத்தில் கொண்டு செல்லும் பொருட்டும் ஷியாம் கிருஷ்ணசாமியை கட்சியின் மாநில இளைஞரணித் தலைவராக நியமனம் செய்யும் தீர்மானத்தை கட்சி ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றுச் செல்வதைக் குறிக்கோளாகக் கொண்டு, அந்த இலக்கை அடைய புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்ற சபதமேற்போம் என முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், சென்னை மட்டுமால்லாது, தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலும் புயல், மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாத வகையில், எந்தவிதமான ஊழலுக்கும் இடமின்றி போதுமான கட்டுமான வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனைத்து டாஸ்மாக் கடைகளையும், சட்டவிரோத பார்களையும், மது உற்பத்தி ஆலைகளையும் உடனடியாக மூட வேண்டுமெனவும், திமுக அரசை ஆட்சியிலிருந்து அகற்றிடவும், 2024-நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திமுகவை வீழ்த்திடவும், ஊழலற்ற ஆட்சியை அமைத்திடவும் புதிய தமிழகம் கட்சி தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி, மக்கள் விரோத திமுக அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தக்கூடிய பரப்புரையை உடனடியாக மேற்கொள்ளவும் புதிய தமிழகம் தீர்மானம் போட்டுள்ளது.

அத்துடன், 2024-நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையான, நியாமான முறையில் நடத்துவதற்குப் போதிய வழிமுறைகளைக் இப்போதிருந்தே கையாள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும், தேவேந்திரகுல வேளாளர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.