ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி!

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோட்டில் நேற்றைய தினம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பிய அவருக்கு காய்ச்சல் இருந்திருக்கிறது. இதையடுத்து உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வருகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், இன்றைய தினம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு பிறந்தநாள் என்பது தான். மகன் இறந்ததால் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என அறிவித்துவிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிறியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்க மட்டும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதற்குள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இன்னும் ஓராண்டு கூட நிறைவடையவில்லை. கடந்த மார்ச் மாதமும் இதேபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது மூப்பு காரணமாக இளங்கோவனுக்கு அடிக்கடி உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் வருவது குறிப்பிடத்தக்கது.