மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர முயற்சித்து வருகிறோம்: மணிப்பூர் டிஜிபி!

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அமைப்புகள் இணைந்து பணியாற்றி வருவதாக அம்மாநில டிஜிபி ராஜீவ் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே வன்முறை நீடித்து வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு மணிப்பூர் மாநில டிஜிபி ராஜீவ் சிங் செய்தியாளர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை பேசினார். அவர் கூறியதாவது:-

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கு மத்திய மற்றும் மாநில படைகள் இணைந்து மாவட்ட அளவிலான குழுக்களை அமைத்து பணியாற்றி வருகின்றன.
என்னைப் பொருத்தவரை அனைத்து படைகளும் சமமானவை. மத்திய மற்றும் மாநில படைகள் இரண்டும் இணைந்து செயலாற்றி வருகின்றன. இந்த வன்முறையினால் கடந்த அக்டோபர் மாதம் காவல்துறை அதிகாரி சிங்தம் ஆனந்த் கொல்லப்பட்டார். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் மணிப்பூரில் அமைதி திரும்பும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மே மாதம் தொடங்கி, 9 மாதங்களாக நடைபெற்றுவரும் மணிப்பூர் வன்முறையினால் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.