சிறையில் இருக்கும் ஒருவர் அமைச்சர் பதவியில் இருப்பது சட்டத்தின் மாண்புக்கு எதிரானது: வானதி சீனிவாசன்

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு பின்னால் நீதிபதி சொன்ன விஷயமும் இருக்கலாம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியது திமுகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது.

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜிக்கு இலாகா இல்லாத அமைச்சர் பதவியும், அரசாங்க சம்பளமும் வழங்கப்படுவது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. ஆனாலும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் இருந்து வந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்த சூழலில்தான், செந்தில் பாலாஜி அதிரடியாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கிட்டத்தட்ட 230 நாட்களாக சிறையில் அமைச்சர் பதவியில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, திடீரென ராஜினாமா செய்தது பெரும் பேசுபொருளானது.

இந்நிலைியல், இந்த விவகாரம் குறித்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து வானதி சீனிவாசன் கூறியதாவது:-

செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்ட போதே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நமது ஆளுநர் வலியுறுத்தினார்கள். இதே கருத்தை தான் நாங்களும் கூறி வந்தோம். ஆனால் இத்தனை நாட்களாக நீதிமன்றத்தால் சிறைக்கு அனுப்பப்பட்ட ஒருவருக்கு இலாகா இல்லாத அமைச்சர் பதவியை கொடுத்து வந்ததே ஒரு அவமானகரமான செயல் தான். தற்போது திமுக அமைச்சர் பலர் மீது மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த முறை சட்டமன்றத்திற்கு வந்திருந்த ஒரு அமைச்சர் (பொன்முடி) இந்த முறை அமைச்சர் பதவியில் இல்லாமல் இருப்பதை பார்த்தோம். இன்னும் திமுக ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் எத்தனை அமைச்சர்கள் உள்ளே இருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.

இப்படிப்பட்ட சூழலில், இலாகா இல்லாமல் சிறையில் இருந்த அந்த அமைச்சர் ராஜினாமா செய்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். சட்டத்தின் மீது மரியாதை வைத்து இதை செய்தார்களா அல்லது ஜாமீன் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கூறிய விஷயத்தால், அந்த அழுத்தத்தால் இந்த முடிவை எடுத்தார்களா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், குற்ற வழக்கில் சிறையில் இருக்கும் ஒருவர் அமைச்சர் பதவியில் இருப்பது சட்டத்தின் மாண்புக்கு எதிரானது. இதை முன்பாகவே செய்திருந்தால், திமுக அரசுக்கு சட்டத்தின் மீதும், நியாயத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது என்று கருதி இருக்கலாம். ஆனால் இப்போது அப்படி நினைக்கவும் முடியவில்லை. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.