ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார் செல்வப் பெருந்தகை!

சட்டப்பேரவையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை எக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினையை பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கொண்டு வந்துள்ளார். இது, பரிசீலனையில் இருப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. அப்போது, தமிழக அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையின் முதல் பத்தியை மட்டும் படித்துவிட்டு ஆளுநர் அமர்ந்தார். இதன்பிறகு, அந்த உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். பின்னர், அரசால் அளிக்கப்பட்ட தமிழ், ஆங்கில உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்பதற்கான தீர்மானத்தை பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தபோது, அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். இந்த சூழலில், பேரவையில் ஆளுநர் பேசியது தொடர்பான வீடியோ, ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் வெளியானது.

இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவுவை சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று காலை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். ‘ஆளுநர் தனது பேச்சின்போது தெரிவித்த சில கருத்துகள், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. அதை எக்ஸ் தளத்தில் வெளியிட்டது அவையின் உரிமை மீறல். எனவே, இதுகுறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய செல்வப் பெருந்தகை, “ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையைபடிக்க வந்தபோது, பேரவைத் தலைவராகிய நீங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டீர்கள். அவர் பேசிய கருத்துகள், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால் சிறிது நேரத்தில், நீக்கப்பட்ட காட்சிகள் ஆளுநரின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன” என்றார்.

அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு, “ஆளுநர் தொடர்பாக நீங்கள் கொடுத்த கடிதம் எனது பரிசீலனையில் உள்ளது” என்றார்.