ஷாரூக்கானுடன் இணைந்து நடிக்கிறேனா? வதந்திகளை நம்பவேண்டாம்: யாஷ்!

கேஜிஎப் புகழ் யாஷ் தற்போது டாக்சிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக வதந்திகள் வந்தன. இதற்கு தற்போது யாஷ் விளக்கம் அளித்துள்ளார்
யாஷ்

கன்னட திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் யாஷ். இவரின் நட்சத்திர அந்தஸ்து கேஜிஎப் படத்திற்கு பிறகு பலமடங்கு உயர்ந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கேஜிஎப . என்னதான் வெளியாகும் போது இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் படத்தை பற்றி பாசிட்டிவான டாக் இருந்து வந்ததால் மெல்ல மெல்ல ரசிகர்களின் பார்வை இப்படத்தின் மீது திரும்பியது. இறுதியில் இந்தியளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது கேஜிஎப். அதன் பிறகு யாஷை ராக்கி பாய் என்றுதான் ரசிகர்கள் அழைக்க துவங்கினார்கள். அதன் பிறகு கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு பிறகு யாஷின் லெவல் எங்கேயோ சென்றுவிட்டது எனலாம்.

இந்தியளவில் மிகப்பெரிய நாயகனாக உருவெடுத்துள்ள யாஷ் அடுத்ததாக டாக்சிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு திரையில் வெளியாகவுள்ளது. பான் இந்திய படமாக உருவாகும் டாக்சிக் திரைப்படத்தில் யாஷுடன் இணைந்து ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவின. இந்த செய்தியை கேட்டு ரசிகர்களும் உற்சாகமாகினார்கள். ஆனால் படக்குழுவிடம் இருந்து அதிகாரபூர்வமாக தகவல் வரும் வரை எந்த செய்தியையும் ரசிகர்களை நம்ப வேண்டாம் என கூறிவிட்டார் யாஷ்.

கடந்த பல மாதங்களாக ஷாருக்கான் யாஷின் டாக்சிக் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இதையடுத்து யாஷ் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நிருபர் ஒருவர் ஷாருக்கான் டாக்சிக் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா என கேள்வி கேட்டார். அதற்கு யாஷ் இல்லை, இன்னும் எதுவும் முடிவாகவில்லை. வதந்திகளை நம்பவேண்டாம் என கூறிவிட்டார். இதையடுத்து ஷாருக்கான் மற்றும் யாஷ் இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.