தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

மேட்டூர் அணையில் குறித்த நேரத்தில் தண்ணீரை தமிழக அரசு திறந்துவிடவில்லை என்று கூறிய அண்ணாமலை, 40 % சம்பா நெல் சாகுபடி குறைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகள் பாசனத்திற்கு முழுக்க முழுக்க மேட்டூர் அணையை மட்டுமே நம்பியுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறக்காதது, போதிய மழை பெய்யாதது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. அக்டோபர் 10ஆம் தேதி வாக்கில் மேட்டூர் அணையும் 30 அடியாக சரிந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனாலும் நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த வட கிழக்கு பருவமழையை வைத்து காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடியை மேற்கொண்டனர். ஜனவரியில் மழை நின்றுவிட்ட நிலையில், பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டும் காயும் நிலைக்கு சென்றது. அதே சமயம் மேட்டூர் அணையில் 70 அடி வரை தண்ணீர் இருந்தது. இதனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 3 முதல் 10ஆம் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தமிழ்நாடு அரசு தண்ணீர் திறந்தது. எனினும் இந்த தண்ணீர் போதவில்லை என்றும் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “காவிரியில் குறித்த நேரத்தில் நீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40 சதவிகிதம் குறைந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே இதற்கு காரணமாகும்” என்று குற்றம்சாட்டியுள்ளர்.

கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ காவிரி தண்ணீர் பற்றியோ எந்தக் கவலையும் இன்றி சரியான நேரத்தில் தண்ணீர் பெற்றுத் தராமல் தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைத் திறந்து விட மறுத்து வந்தது. அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய திமுக எந்தக் குரலையும் எழுப்பவில்லை என்றும் காட்டமாக விமர்சனம் செய்தார்.

டெல்டா விவசாயிகள் இன்று 40 சதவிகிதத்திற்கு குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு இரண்டு மாநில திமுக காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு எனவும், போதிய மகசூல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு, அதற்கான நஷ்ட ஈட்டை, தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.