செந்தில் பாலாஜியின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22-ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தொடங்கக் கூடாது. விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை இன்று (பிப்.16) நேரில் ஆஜர்ப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், அமலாக்க துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இந்த மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்காவிட்டால், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிடும் என்று முறையிட்டார். மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கமான முறையில் பட்டியலிடும் போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

இதேபோல், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை திங்கள்கிழமைக்குப் பதிலாக புதன்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது. மனுவின் நகல் அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டு விட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக செந்தில் பாலாஜியை காணொளி வாயிலாக ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனால், இன்று செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு நடைபெறவில்லை.