தனது பிறந்தநாளுக்கு படக்குழுவினருக்கு பிரியாணி போட்ட சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமான கேக் வெட்டப்பட்டு படக்குழுவினருடன் தனது பிறந்த நாளை நடிகர் சிவகார்த்திகேயன் கொண்டாடியுள்ளார். மேலும், படக்குழுவினருக்கு தனது கையால் பிரியாணி பரிமாறும் புகைப்படங்களும் இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகின்றன.

அமரன் திரைப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று மாலை வெளியான நிலையில், கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், கவின் என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சிவகார்த்திகேயன் ரசிகர்களும் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. இந்நிலையில், படத்தின் செகண்ட் லுக்கை தற்போது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ராஜ்கமல் நிறுவனம் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். ராணுவ ஜீப் மீது ராணுவ அதிகாரி உடையை அணிந்து மிடுக்காக சிவகார்த்திகேயன் போஸ் கொடுத்து அமர்ந்திருக்கிறார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது 39-வது பிறந்த நாளை படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் கேக் ஊட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. கூடவே அந்த படத்தின் ஹீரோயின் ருக்மிணி வசந்தும் உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிரியாணி போட்ட காட்சிகள் புகைப்படங்களாக தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் எட்ட முடியாமல் தவித்த நிலையில், இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படமும் 100 கோடி வசூலை எட்டவில்லை. மேலும் படத்தின் பட்ஜெட்டுக்கு குறைவாகவே வசூல் வந்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்து இருந்தன. அடுத்ததாக அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி ரூபாய் வசூலை வாரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.