நமது குடும்பம் மோடி குடும்பம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “நமது குடும்பம் மோடி குடும்பம்” என்று முழக்கமிட்டார். அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்களும் அதை திரும்பக் கூறி அரங்கை அதிரவைத்தனர்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் பிரதமருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், ஜான்பாண்டியன், தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இந்த பொதுக்கூட்ட மேடையின் முகப்பில் “மீண்டும் மோடி சர்க்கார்” என்று எழுதப்பட்டிருந்தது. கூட்டத்தில் வரவேற்பு உரையாற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நமது குடும்பம் மோடி குடும்பம்” என்ற கோஷத்துடன் தனது பேச்சைத் தொடங்கினார். அவர் பேசியதாவது:-

பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். தமிழகத்தை தரணி போற்றச் செய்தவர், காசி தமிழ் சங்கமத்தை நடத்தியவர் பிரதமர் மோடி. தமிழனுக்கு உலகம் முழுவதும் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் பிரதமர். பிரதமர் மோடி நமது குடும்பத்தின் உறுப்பினர். நாம் அனைவரும் மோடியின் குடும்ப உறுப்பினர்கள். பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகத்துக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் தமிழகத்துக்கு புதிய திட்டங்களைக் கொடுக்கிறார். இன்றைக்குகூட 500 மெகாவாட் திட்டத்தை கல்பாக்கத்தில் தொடங்கிவைத்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறார்.

கடந்த வாரம் தூத்துக்குடி, திருநெல்வேலியில் ரூ.17,500 கோடி அளவிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதற்கு முன்பாக தமிழகம் வந்தபோது, 20,000 கோடி ரூபாய்க்கான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இப்படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே, பிரதமர் மோடி தமிழகத்துக்கு கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி, தமிழனை, தமிழ் மக்களை நேசிக்கும் வகையில், அவர் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும், தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், மொழியின் பெருமையை, தமிழ்தான் இந்த உலகின் தொன்மையான மொழியென்று பேசி வருகிறார். எனவே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் சார்பில், பிரதமர் மோடியை மீண்டும் ஒருமுறை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.