போதைப் பொருள் கடத்துவோர், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் இணைத்தது தமிழக பாஜகதான்: ரகுபதி

“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்” என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கஞ்சா பயிரிடப்படாத பூமி தமிழகம். போதைப்பொருள் எதிர்கால சந்ததியை பாதிக்கும் என்பதற்காக அதனை தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குஜராத்தில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது என்பது நாடறிந்த உண்மை.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி பாஜகதான். தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 16 குற்றவாளிகளை பாஜக கட்சியில் இணைத்துள்ளது. 2022-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2,016 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் வழக்குகளில் 80 சதவீதத்துக்கு அதிகமானவர்களுக்கு தண்டனையை திமுக அரசு பெற்றுத்தந்துள்ளது. ஆளுநர் அனுமதி அளித்த பிறகே குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அமைதியான ஆட்சி, நிலையான ஆட்சி நடைபெறுகிறது. யாரும் குழப்பத்தை விளைவிக்க முடியாது. தேர்தலுக்காக தமிழக அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தலுக்காக தமிழக அரசு மீது மத்திய அரசு பழி போட வேண்டாம். தேர்தலுக்காக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி துவங்கியுள்ளது. தேர்தலுக்கு பின் பணி நின்றுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.