எங்கள் கட்சியின் வெற்றியை தடுப்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர்: வித்யாராணி வீரப்பன்!

“எங்கள் கட்சியின் வெற்றியை தடுப்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர்” என்று கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வித்யாராணி வீரப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராகிய எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்கட்சிகள் பல்வேறு வகையில் எங்கள் கட்சி பொறுப்பாளர்களுக்கும் தொந்தரவு தருகின்றனர்.

வேட்புமனு பரிசீலனையில்போது எங்கள் கட்சியினர் மீது காரை ஏற்றுவது போல் சிலர் வந்தனர். நேற்று கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நின்ற எங்கள் கட்சி பொறுப்பாளர்களை சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மிரட்டியுள்ளார். பிரசாரத்தின்போது எங்கள் வாகனங்கள் பின் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். அலுவலர்களுக்கு எங்கள் பின்வருவதை தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. போலீஸாரும் எங்கள் மீது வேண்டுமென்றே வழக்கு போடுகின்றனர். எங்கள் கட்சியின் வெற்றியை தடுப்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர். இது குறித்த புகார் மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வழங்கியுள்ளேன். எத்தனை தடைகள் வந்தாலும், அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி போட்டியிடுவதால் தேர்தல் களத்தில் இத்தொகுதி கவனத்தை ஈர்த்துள்ளது.