சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை: ஜெயக்குமார்!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! என்று, தோனி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

பரபரப்பான த்ரில் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 68-ஆவது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 218/5 ரன்களைக் குவித்தது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவா்களில் 191/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. யஷ் தயாள் வீசிய 20ஆவது ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய தோனி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில், தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன் இதுதான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்! ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்! சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! நன்றி‌ தோனி! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.