நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த நாளில் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இந்த நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இந்த நடைமுறை நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் புனிதமான சடங்குக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரி கரூர் நவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், இந்த எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வை நடத்திக் கொள்ளலாம் என கடந்த மே 17ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து, மே 18 ஆம் தேதியன்று, நெரூரில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட்ட இலைகளில் அங்கபிரதட்சணம் செய்தனர்.

எச்சில் இலையில் உருண்டு நேர்த்திக்கடன் செய்வதை உயர் நீதிமன்றமே அங்கீகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களை இழிவு செய்யும் இந்த சடங்குக்கு நீதிமன்றம் துணை போவதா என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருளுவது சரியே என ஐகோர்ட் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்ததை எதிர்த்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் நீதிபதியாக இருந்துகொண்டு ஜிஆர் சுவாமிநாதன் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி மற்றும் மத பாகுபாடு அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதியாக தொடர ஜிஆர் சுவாமிநாதனுக்கு தகுதி இல்லை என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்துள்ளதாகவும், அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2015 ஆம் ஆண்டு தலித் பாண்டியன் என்பவரின் மனுவின் மீதான விசாரணையில் எச்சில் இலைகள்மீது அங்கப்பிரதட்சணம் செய்வதற்குத் தடை விதித்து உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டி உள்ளனர். மேலும், கர்நாடகாவில் குக்கே சுப்ரமண்யா கோவில் உள்பட பல கோவில்களில் மட்டை ஸ்நானம் என்ற எச்சில் இலை மீது நடத்தப்பட்டு வந்த அங்கப்பிரதட்சணம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன், பானுமதி ஆகியோர் வழங்கிய தீர்ப்பும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி – எச்சில் இலைமீது உருளுவது மத அடிப்படை உரிமை, அதைத் தடுக்க முடியாது என்று உத்தரவு பிறப்பிப்பது சட்டப்படி குற்றச் செயல் என்றும் அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இதுவரை கொடுத்துள்ள சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக்கொண்டுள்ளனர்.