பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க எஸ்டிஐ-க்கு அனுமதி!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து அவர் மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிறப்பு புலனாய்வு குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பிரஜ்வல் ரேவண்ணாவால் அவரின் வீட்டு பணிப்பெண் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காக சிறப்பு பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச் சென்றார். இந்த வழக்கில் விசாரணைக்காக அவரை 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி தர வேண்டும்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாதாடினார்.

அதேநேரம், பிரஜ்வல் ரேவண்ணா சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், “இது முழுவதுமாக ஜோடிக்கப்பட்ட வழக்கு. பிரஜ்வல் மீது திட்டமிட்டு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. மேலும், புகார் அளித்த பெண்ணின் அங்க அடையாளங்கள் வீடியோவில் இல்லை. எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கூடாது” என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, பிரஜ்வல் ரேவண்ணாவை ஆறு நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரிடம் சிறையில் வைத்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு வந்தார். முன்னதாக, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், எஸ்ஐடி அவரை காவலில் எடுத்துள்ளது. ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் யாரேனும் இருப்பின் தாமாக முன்வந்து புகாரளிக்குமாறு முன்பே கூறியுள்ளோம். இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக எனக்கு இன்னும் அதிக தகவல் தெரியவில்லை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும், அதிகாரிகளுக்கு ரேவண்ணா தேவையான ஒத்துழைப்பை அளித்து வருவதாகத் தெரிகிறது. அதிகாரிகள் தற்போது அவரை காவலில் வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.