தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு எதிராக நிர்மலா மனு!

காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் நடைமுறையை சிறுமைப்படுத்த முயற்சிப்பதாகவும் இது ஜனநாயக அமைப்புகள் மீதான நேரடி தாக்குதல் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பு போல செயல்படுவதாக தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதேவேளையில், தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமும் எதிர்க்கட்சிகள் முறையிட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவின் மூத்த தலைவர்களும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர், நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்தனர். இது தொடர்பாக பியூஸ் கோயல் கூறுகையில், “காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் சில சமூக அமைப்புகள் மற்றும் என்.ஜி.ஓக்களும் தேர்தல் நடைமுறையை சிறுமைப்படுத்த முயற்சிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த செயல்பாடு இந்திய ஜனநாயக அமைப்புகள் மீதான நேரடி தாக்குதல் ஆகும். தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான சந்திப்பின் போது வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் நடைமுறையின் போது விதிகளையும் நடைமுறைகளையும் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணைய மரபுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும என வலியுறுத்தினோம். அது மட்டும் இன்றி, தேர்தல் நடைமுறையை சிறுமைப்படுத்த நடக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தி, இது போன்ற செயல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.

முன்னதாக, தேர்தல் ஆணைய அதிகாரிகளை ‘இந்தியா’ கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்டோர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அபிஷேக் சிங்வி கூறியதாவது:-

தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மூன்று முக்கிய பிரச்சனைகள் குறித்து மனு அளித்து இருக்கிறோம். வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும். தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும். தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.