வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் கடந்த ஜூன் 1ம் தேதி உடன் நிறைவு பெற்றது. அதன் பிறகு வெளியான கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன் காரணமாக அதற்கடுத்து ஜூன் 3ம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை உச்சம் தொட்டது. ஆனால், அடுத்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கருத்துக்கணிப்புகள் கூறியதற்கு சற்று மாற்றாக முடிவுகள் வெளியாகின. இதனால், பாங்குசந்தை அன்றைய தினம் வீழ்ச்சியடைந்தது. இது குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை காங்கிரஸ் கட்சியினர் முன்வைத்தனர். தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.

முன்னதாக அதானி நிறுவனம் பற்றி ஹிண்டன்பர்க் பத்திரிகை வெளியிட்ட செய்தி காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வெளிநாட்டு பத்திரிகை செய்தி காரணமாக இந்திய நாட்டு பங்குச்சந்தை சரிவு ஏற்பட்டது. அதனால் உள்ளூர் சிறு முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக கூறி இதுகுறித்து செபி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே செபி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அதே வழக்கில் இடைக்கால மனுவாக வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் பங்குச்சந்தை சரிந்தது. அதனால் பல முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்தனர். இதுகுறித்து செபி விசாரணை நடத்தி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.