விஜய் ஒரு தடவை சொன்னால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்: புஸ்ஸி ஆனந்த்!

வருகிற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதிக்கான தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூசகமாக அறிவித்தார்.

காரைக்குடி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் பிறந்ததினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 30 திருநங்கைகள் உட்பட 500 பேருக்கு அரிசி, பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது:-

விஜய் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஒரு தடவை சொன்னால் அவர் பேச்சை, அவரே கேட்கமாட்டார். புதிதாக யார் கட்சிக்கு வந்தாலும், முதலில் சுவரொட்டிகள் ஒட்டிய தொண்டர்களை தலைவர் விட்டு கொடுக்க மாட்டார். அதனால் தொண்டர்களை யாரும் இலக்காரமாக பார்க்க கூடாது. நமது கட்சி மக்கள் சேவை செய்யும் கட்சியாக மாறியுள்ளது. .

வருகிற 2026-ம் ஆண்டு இப்பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பிரபு தான் காரைக்குடி தொகுதிக்கு எம்எல்ஏ என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். பின்னர் சுதாரித்து கொண்ட அவர், “எந்த தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவு செய்வார்” என்று தெரிவித்தார்.