முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, கடந்த 2014-இல் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின்னர், கடந்த 2022-இல் இரு மாநிலங்களைச் சேர்ந்த 2 தொழில் நுட்ப வல்லுனர்கள் கண்காணிப்புக் குழுவில் சேர்க்கப்பட்டனர். தற்போது மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராஜேஷ் இந்தக் குழுவின் தலைவராக உள்ளார்.

தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் வேணு, கேரள நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு கடந்த ஆண்டு மார்ச் 27-இல் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இதையடுத்து, தற்போது மத்திய கண்காணிப்புக் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்து வருகின்றனர். இன்றும்(ஜூன் 13), நாளையும்(ஜூன் 14) ஆய்வு நடைபெறுகிறது.