சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

கடந்த 2022ஆம் ஆண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வரும் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் பல்வேறு ஊடகங்கள், யூடியூப் பேட்டிகளில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை முன் வைத்து வந்தார். இதில் பெரும்பாலானவை சர்ச்சையான கருத்துகளாகவே இருந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், செந்தில் பாலாஜி ஆகியோரை கடுமையாக விமர்சித்து தனது கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார்

இதற்கிடையில் சவுக்கு சங்கர், தன்னை பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், அதற்கு தடைவிதிக்க கோரியும், மான நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்கவும் உத்தரவிடக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த உத்தரவை மீறி தொடர்ந்து சவுக்கு சங்கர் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு இடைக்காலத் தடை உத்தரவை மீறி அவதூறு கருத்து பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதி, இனி கருத்துகளை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் சவுக்கு சங்கர் அபராதத்தொகையை செலுத்த வில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வரும் ஜூலை 9ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.