இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சரை வலியுறுத்தி உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இலங்கைக் கடற்படையினரால் நேற்று (18-6-2024) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-08-MM-05 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 18-6-2024 அன்று கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாகவும் கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.