நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை: எம்.பி வில்சன்!

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை என திமுக எம்.பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் ஆரம்பம் தொட்டே எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, 67 பேர் 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றது, ஹரியானா பயிற்சி மையத்தில் 6 மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றது, குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டது என பல்வேறு குளறுபடிகள் எழுந்துள்ளன.
அத்துடன் நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், தவறு நடந்திருந்தால் ஆம் இது தவறு என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து இருந்தது.

இந்த சூழலில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், “நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் கிரிமினல் குற்றச் செயல்கள் என பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் பல்வேறு ஆதாரங்கள் உள்ள நிலையிலும், ஒன்றிய அரசானது இதுவரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பீகார் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்கள் ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து மோசடிகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர், ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதில் உள்ள தாமதம் காரணமாக, எப்ஐஆர் பதிவு செய்யப்படாத அல்லது விசாரணை தொடங்கப்படாத பிற மாநிலங்களில் இது குற்றவாளிகள் ஆதாரங்களை அழித்திட வழிவகுக்கும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “நீட் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஏன் இந்த குற்றச் செயல்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்?

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் “தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019”-ல் திருத்தம் செய்வதன் மூலம் நீட் மற்றும் எக்சிட் தேர்வுகளை நீக்குவது குறித்து மாண்புமிகு பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும். இந்த திருத்தம் என்பது ஒவ்வொரு மாநிலமும் தனிப்பட்ட முறையில் அதன் மருத்துவ சேர்க்கை நடைமுறைகளை நிர்வகிக்க அனுமதிக்கும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினால் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டும் என்றும் வில்சன் வலியுறுத்தி உள்ளார்.