ரஷ்ய- வட கொரியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்!

வட கொரியா சென்றுள்ள ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு நாடுகளில் எந்த நாடு தாக்கப்பட்டாலும், இன்னொரு நாடு உதவுவதற்கு உறுதியளிக்கும் அம்சம் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது மேற்கத்திய நாடுகளுக்குக் கவலையளிக்கக் கூடியது என்று கருதப்படுகிறது.

இது குறித்து தலைநகா் பியோங்கியாங்கில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் விளாதிமீா் புதின் கூறியதாவது:-

ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே அனைத்து விவகாரங்களையும் உள்ளடக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அம்சங்களில், எதிரி நாடுகளின் தாக்குதலுக்குள்ளாகும்போது பரஸ்பரம் ராணுவ உதவி செய்துகொள்ளும் அம்சமும் இடம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் தற்காப்புக்கானது மட்டுமே. தனது எல்லைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் வட கொரியாவின் உரிமை நிலைநாட்டப்படுவதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது. வட கொரியாவுடன் ராணுவ தொழில்நுட்ப மேம்பாட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ரஷ்யா மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்றாா் புதின்.

செய்தியாளா்கள் சந்திப்பில் புதினுடன் பங்கேற்ற கிம் ஜோங்-உன் பேசியதாவது:-

இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒப்பந்தம் இது. ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே இதுவரை இருந்து வந்த நட்புறவை இந்த ஒப்பந்தம் கூட்டணியாக உயா்த்தியுள்ளது. இருதரப்பு அரசியல், பொருளாதார, ராணுவ ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் இந்த ஒப்பந்தம், பன்முகத் தன்மை நிறைந்த புதிய உலகைப் படைப்பதற்கு உதவும் என்றாா் அவா்.

கொரிய தீபகற்பத்தில் ஜப்பான் 35 ஆண்டுகளாக காலனி ஆதிக்கம் செலுத்திவந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதற்கும் ஆசியாவின் மஞ்சூரியா பகுதியை சோவியத் யூனியன் கைப்பற்றியதற்கும் பிறகு கொரியாவிலிருந்த ஜப்பான் படைகளும் சரணடைந்தன. அதையடுத்து, அந்த தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக ஆட்சியும் வடக்கே சோவியத் யூனியன் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியும் அமைக்கப்பட்டது.

எனினும், 1950-இல் தென் கொரியாவை வட கொரியா கைப்பற்ற முயன்றபோது கொரிய போா் வெடித்தது. இதில் வட கொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென் கொரியாவுக்கு அமெரிக்காவும் உதவின. அந்தப் போா் முடிவுக்கு வந்த பிறகும் அமெரிக்க-சோவியத் யூனியன் பனிப்போரின் ஒரு பகுதியாக கொரிய தீபகற்பம் திகழ்ந்தது. சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டு சிதறுண்டதற்குப் பிறகு அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

இருந்தாலும், தென் கொரியாவுக்கு தொடா்ந்து பாதுகாப்பு உதவி அளித்துவரும் அமெரிக்கா, அந்த நாட்டுடன் தொடா்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இது தங்களது நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகை எனக் கருதும் வட கொரியா, அந்த அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்காக அணு ஆயுதங்களையும் அவற்றை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்துவதற்கான ஏவுகணைகளையும் உருவாக்கி சோதித்துவருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்காக வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்தது. அதைக் கண்டித்து ரஷ்யா மீதும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்த நிலையில், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், ரஷ்யாவும் வட கொரியாவும் தனது உறவை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. முதல்கட்டமாக, வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் ரஷ்யாவில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போதே இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில், 2 நாள் சுற்றுப் பயணமாக வட கொரியாவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த விளாதிமீா் புதின், கிம் ஜோங்-உன்னுடன் சக்திவாய்ந்த பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுளது.

வடகொரியா பயணத்தை முடித்துவிட்டு ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின் வியத்நாமில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். உக்ரைன் போா் காரணமாக சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிா்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவா், அந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

வியத்நாமில் அந்த நாட்டு அதிபா் டே லாமுடன் பேச்சுவாா்த்தை நடத்திய புதின், ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்காக நம்பகத்தன்மை வாய்ந்த பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்குவதன் முக்கியத்துவதத்தை அவருடன் பகிா்ந்துகொண்டதாக செய்தியாளா்களிடம் பிறகு கூறினாா். பிராந்தியத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காணும் வகையில் அந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று இருவரும் விரும்புவதாக அவா் தெரிவித்தாா். அந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, இரு தரப்பு உறவை பலப்படுத்துவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களில் விளாதிமீா் புதின் கையொப்பமிட்டாா்.