பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் இன்று (ஜூலை 4) மூன்றாவது நாளாக நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 30-ம் தேதி கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று நாட்டுப்படகுகள், நம்புதாளை கடற்பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு நாட்டுப்படகு என மொத்தம் நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றிய இலங்கைக் கடற்படையினர் அதிலிருந்த 25 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த 2-ம் தேதி தொடங்கினர். மூன்றாவது நாளாக இன்றும் அவர்களது வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. இதனால் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்களின் ஆலோசனை கூட்டம் மீனவப் பிரதிநிதி ராயப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு அதிகாரிகள் மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாக கூறியுள்ளதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிடும் போராட்டமும், மண்டபம் ரயில் நிலையத்தை முற்றுகைப் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டு, வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் நாளை (ஜூலை 5) பாம்பன் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.