மதுரை கப்பலூர் டோல்கேட்டில் இனி உள்ளூர் மக்களுக்கும் சுங்க கட்டணம்!

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50 % கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதுவரை முழு கட்டண விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பால் உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் கட்டணம் வசூலிப்பதிலும் சுங்கச்சாவடி நிர்வாகம் அடிக்கடி உள்ளூர் மக்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடக்கிறது.

இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளூர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் 4 ஆண்டுகளாக சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்காக ரூ. 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் கட்டணத்தை ஒருவாரத்தில் செலுத்துமாறு கடந்த 2 ஆம் தேதி சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அப்படி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. இதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், உள்ளூர் மக்கள் 50% சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கி வந்த நிலையில், நாளை நள்ளிரவு முதல் (ஜூலை 10) உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனங்கள் 50% சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை முழு கட்டண விலக்கில் சென்று வந்த உள்ளூர் வாகனங்கள் நாளை முதல் 50% கட்டணம் செலுத்த வேண்டும்.