உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்காக இழப்பீடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பணியின் போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்காக இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்புப் பணியாளராக பணிபுரிந்து வந்த கலையரசன், பணியில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் கடந்தாண்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கலையரசனின் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி, அவரது தந்தை அர்ஜூனன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தற்போது, அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், `தெரிந்தே சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கும் போது, மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்தவருக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து, மனுதாரரான அர்ஜூனனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.