மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 12.5 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம்: பாஜக!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 12.5 கோடி வேலைவாய்ப்புகள்உருவாக்கப்பட்டுள்ளன என்றுபாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும், வேலைவாய்ப்பின்மை குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த சில தினங்களாக கேள்வி எழுப்பி வருகிறார். வேலைவாய்ப்பு அளித்துள்ளதாகக் கூறி பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களை திசைதிருப்பி வருகிறார் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம் நேற்று கூறியதாவது:-

பிரதமர் மோடியின் சீரிய தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த 10 ஆண்டுகளில் மட்டும் 12.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு அவை மக்களுக்குக் கிடைத்துள்ளன. கடந்த 2023-24-ம்ஆண்டில் மட்டும் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் ஏற்படுத்தப்பட்ட சாதனையாகும். பிரதமர் மோடியின் வலுவான தலைமையின் காரணமாக வேலைவாய்ப்பை உருவாக்குவதில் உலகிலேயே வெற்றிகரமான நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்துக்களை அவமதிப்பு செய்த ராகுல் காந்தி தற்போது மதத்தின் பெயரால் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தியும், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பொய்களைப் பரப்பி மக்களை திசை திருப்பி வருகின்றனர். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருவதாக ராகுல் காந்தியும், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் கூறிவருகின்றனர். ஆனால், உலகத்தலைவர்கள் அப்படி கூறவில்லை. உலக வங்கியும், சர்வதேச செலாவணி நிதியமும் இந்தியாவைப் பாராட்டி வருகின்றன. நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும், வேலைவாய்ப்பு களை உருவாக்குவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் அவை பாராட்டி வருகின்றன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 முதல் 2014 வரை 2.9 கோடிவேலைவாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி அரசு 10 ஆண்டுகளில் 12.5 கோடிவேலைவாய்ப்புகளை உருவாக்கியது. 2017-ல் வேலையில்லா திண்டாட்டம் 6 சதவீதமாக இருந்தது. அது தற்போது 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.