எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாக ஆதரித்தது: சஞ்சய் ராவத்!

மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியே எமெர்ஜென்சி போல உள்ளது என்று சஞ்சய் ராவத் கூறினார்.

முன்னால் இந்திய பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாளானது அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. தேர்தல் பிரகாரங்களில், பாராளுமன்றத்திலும் 50 வருடங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியை சுட்டிக்காட்டி காங்கிரஸை தொடர்ந்து பாஜக விமர்சித்து வரும் நிலையில் அதன் உச்சமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மகாராதிராவில் இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவ சேனா அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எமெர்ஜென்சி குறித்து தெரிவித்துள்ள கருத்து அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அவர் கூறியுள்ளதாவது:-

அந்த சமயத்தில் நாட்டில் சிலர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர். இந்திரா காந்தி அரசை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அரசியல்வாதிகள், நமது வீரர்களிடமும் ராணுவத்திடமும் அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று அவர்கள் நேரடியாகவே வலியுறுத்த தொடங்கினர்.

இதுபோன்ற ஒரு சூழலில் வாஜ்பாய் பிரதமராக இருந்திருந்தாலும் எமெர்ஜென்சியை அறிவிக்கும் முடிவையே எடுத்திருப்பார். வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டங்களும் அரங்கேறின. எனவே எம்ர்ஜென்சி தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. சிவ சேனாவின் பால் சாஹேப் தாக்கரே எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெளிப்படையாகவே எமெர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தது.

அமித் ஷாவுக்கு எமர்ஜென்சி குறித்து முழுமையாக தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். எமெர்ஜென்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அதை அரசியலமைப்பு படுகொலையாக பார்க்கவில்லை. தற்போதுள்ள மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியே எமெர்ஜென்சி போல உள்ளது. இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.