விமான போக்குவரத்து சீராக நடந்து வருகிறது: மத்திய அரசு!

“விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது” என்று மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அதிகாலை 3 மணி முதல், விமான நிலையங்களில் விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது. நேற்று ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக பின்னடைவுகள் உள்ளன. அவை படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. இன்று (ஜூலை 20) நண்பகலுக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். பயணத்திட்ட மாற்றம் மற்றும் பணத்தை திருப்பியளித்தல் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் விமான சேவை நிறுவனங்கள் மற்றும் எங்களுடைய விமான நிலையங்களின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தைவான், ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, அயர்லாந்து, துருக்கி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் யூனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விமான சேவைகளை முற்றிலுமாக நிறுத்தின.

அமெரிக்காவில் 512, ஜெர்மனியில் 92, கனடாவில் 21, இத்தாலியில்45 என உலகம் முழுவதும் நேற்று 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 3,000-க்கும்மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.