முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 27 ஆம் தேதி டெல்லி செல்கிறார்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 27 ஆம் தேதி டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க இருக்கிறார்.

பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் வரும் 27 ஆம் தேதி நிதி ஆயோக் முதல் கூட்டம் நடைபெறுகிறது. நிதி ஆயோக் அமைப்பை சீரமைத்து மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 15 மத்திய அமைச்சர்கள் நிதி ஆயோக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், பொருளாதார நிபுணர் சுமன் கே பெரி தொடர்ந்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவராகவும் தொடர்ந்து வருகின்றனர். விஞ்ஞானி வி.கே.சரஸ்வத், விவசாயப் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், குழந்தை நல மருத்துவர் வி.கே.பால் மற்றும் மேக்ரோ பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி ஆகியோர் அரசாங்க சிந்தனைக் குழுவின் முழுநேர உறுப்பினர்களாகத் தொடர்கின்றனர். பிவிஆர் சுப்ரமணியம் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நிதி ஆயோக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜேபி நட்டா, எச்.டி.குமாரசாமி, ஜிதன் மஞ்சி ராம், லாலன் சிங் வீரேந்திர குமார், ஜுவல் ஓரம், அன்னபூர்ணா தேவி, சிராக் பஸ்வான், கிஞ்சிரப்பு ராம் மோகன் நாயுடு, ராவ் இந்தர்ஜித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வரும் ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்ல இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அவரைச் சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது தமிழ்நாட்டு நலன் சார்ந்து முக்கிய கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.