ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பில்லை: பிரேமலதா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சியினரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது என தகவல்கள் வருகின்றன.

தேமுதிகவை சேர்ந்த திருவள்ளூர் நகர செயலாளர் மணிகண்டனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறான செய்தி. விசாரணை என்ற பெயரில் அவரை அழைத்துப் பேசியுள்ளனர். விசாரணையில் எதுவும் நிரூபிக்கப்படாததால் அவரை வழக்கில் உட்படுத்தாமல் அனுப்பிவிட்டனர்.

அதற்குள் இந்த விவகாரத்தில் தேமுதிகவுக்கும் தொடர்பு உள்ளது என உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செய்திகளை தீர விசாரித்து வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.