அகழாய்வுப் பணிகள் சரியான திசையில் செல்கின்றன: முதல்வர் ஸ்டாலின்!

இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம் என்று அகழாய்வுப் பணிகளில் கிடைத்துள்ள பொருட்களை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் குறித்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவை மேற்கொள் காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம். மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் – தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தாலான பகடைக்காய், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான அஞ்சனக்கோல் ,ஆணி என இப்படித் தொடர்ந்து அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள், தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது.

இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம். இ்வ்வாறு அவர் கூறிஉள்ளார்.