தேர்தல் அறிக்கையை பட்ஜெட் உரையாக நிதியமைச்சர் படித்திருக்கிறார்: ப.சிதம்பரம்!

“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்திருக்கிறார்” என்று மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30ல் சொல்லப்பட்டுள்ள வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை (ELI) திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.

காங்கிரஸ் அறிக்கையின் பக்கம் 11-ல் குறிப்பிடப்பட்டுள்ள உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸின் பல ஆண்டுகால கோரிக்கையான ‘ஏஞ்சல் வரி’ ரத்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பக்கம் 31ல் சொல்லப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையும் தற்போது பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு ஏஞ்சல் வரியை ரத்து செய்தது மகிழ்ச்சியை தருகிறது. இதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில யோசனைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நகலெடுத்திருக்கலாம். விரைவில் அதனை பட்டியலிடுகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.