செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2 நாள் சிகிச்சைக்கு பிறகு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து இன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். இந்த வேளையில் போக்குவரத்து துறையில் பணி வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்து சென்றது. அப்போது செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் வைத்து அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்வும், ஜாமீன் கோரியும் நீதிமன்றங்களை நாடியும் எந்த பலனும் இல்லை. தற்போது அவரது நீதிமன்ற காவல் 49 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் சிறையில் அவர் மதிய உணவு சாப்பிட்டார். அதன்பிறகு அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அவருக்கு பரிசோதனையுடன் கூடிய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை தொடர்ந்து செந்தில் பாலாஜி குணமடைந்து வந்தார். இதையடுத்து நேற்று ஒருநாள் மருத்துவமனை டாக்டர்கள் செந்தில் பாலாஜியை கண்காணித்தனர். இத்தகைய சூழலில் தான் இன்று செந்தில் பாலாஜியின் உடல்நலம் சீரானது. இதையடுத்து செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து இன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.