முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மற்றொரு வழக்கில் ஒருநாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

கரூரில் 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துசிறையில் அடைத்தனர். பின்னர், அவர்களை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற அனுமதியுடன் சிபிசிஐடி போலீஸார் கடந்த22-ம் தேதி 2 நாள் காவலில்எடுத்து, கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை நடத்தி, நேற்று அவர்களைகரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மீண்டும் ஆஜர்படுத்தினர்.

இதனிடையே, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களை மிரட்டி நிலத்தை வாங்கியதாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில், ஒரு நாள் அனுமதி வழங்கி நீதிபதி (பொ) பரத்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் வாங்கல் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.