கோவை நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது!

பெண் போலீஸார் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை கடந்த மே மாதம் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, தினமும் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.