அமலாக்கத் துறையை ஏவி விட திட்டம்: ராகுல் காந்தி!

அமலாக்கத்துறை அதிகாரிகளை என் மீது ஏவி சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்துகொண்டு விவாதித்து வருகின்றனர். அப்போது ராகுல் காந்தி பேசும்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சக்கர வியூகத்தால் நாடெங்கிலும் அச்சம் மிகுந்த சூழ்நிலை நிலவுகிறது; அந்த சக்கர வியூகத்தை ‘இந்தியா’ கூட்டணி தகர்க்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

மக்களவையில் சக்கரவியூகம் குறித்து உரையாற்றினேன். அந்த உரைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளை என் மீது ஏவி சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்காக திறந்த கரங்களுடன் காத்திருக்கிறேன். அமலாக்கத்துறையை வரவேற்கிறேன். அவர்கள் வரட்டும். அவர்களுக்கு தேநீரும், பிஸ்கெட்டும் எனது செலவு. எனது சக்கர வியூகத்தின் பேச்சு சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் என் மீது அமலாக்கத்துறையை ஏவிவிட முயற்சி நடக்கிறது. இதுதொடர்பாக எனக்கு தகவல்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.